15 நவ., 2010

மனைவியை மயக்க...!

என் பொண்டாடியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்...


1. மதியுங்கள் 

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

'ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள் 
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களைப் பொறுத்தவரை 'முழுமையானவர்'. 

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் 'பங்கு கொள்ளுங்கள்'

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது 'வழக்கம்போல்' இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, 'நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று 'பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லைங்க. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons